(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

அடக்கம் உடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடக்கம் உடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (16) அடக்கம் உடையார் அறிவிலர் என்று !

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணலாகாது !

----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

--------------------------------------------------------------------------------------

பாடல்.16.

--------------------------------------------------------------------------------------

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு !

-------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா மடைத் தலையில்

ஓடும் மீன் ஓட உறு மீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு !

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------------------------------------------------------

கொக்கு = கொக்கானது ; மடைத்தலையில் = நீர் மடையினிடத்து ; ஓடும் மீன் ஓட = ஓடுகின்ற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க ; உறு மீன் = (இரையாதற்கேற்ற) பெரிய மீன் ; வரும் அளவும் = வரும் வரையும் ; வாடி இருக்கும் = அடங்கியிருக்கும் ; (அதுபோல) அடக்கம் உடையார் = (தக்க பகைவர் வரும் வரையும்) அடங்கியிருப்பவரை ; அறிவு இலர் என்றெண்ணி = அறிவு இல்லாதவர் என்று கருதி ; கடக்க = அவரை வெல்வதற்கு ; கருதவும் வேண்டா = நினைக்கவும் வேண்டுவதில்லை.

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------------------------------------------------------------------

நீரோடும் மடைத் தலையில் சிறிய மீன்களெல்லாம் ஓடிக்கொண்டிருக்க, தனக்கு இரையாகத் தக்க பெரிய மீன் வரும் வரையில் எப்படி கொக்கு அடக்கமாகக் காத்து  இருக்குமோ, அதுபோல்தான் சான்றோர்களும் பொறுமையாகக் காத்திருப்பார்கள்.

 

கீழ்மைக் குணம் படைத்தோர் தொடுக்கும் சொல்லம்புகளுக்கு  உடனுக்குடன் எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் !

 

ஆனால், பெரிய மீன் வந்ததும் கொக்கு அதை ஒரே கொத்தில் கௌவிப் பிடிப்பதைப்போல, சான்றோரும், தக்க வேளை வந்ததும், சொல்லம்பு விடுத்து வரும் கீழோரை, மடக்கிப் பிடித்து மீண்டும் தலைதூக்கா வண்ணம் முடக்கிப் போட்டுவிடுவார்கள !

 

அடக்கம் உடையவர்கள் அறிவில்லாதவர்கள் என்று ஏளனமாகக் கருதி அவர்களை வெல்ல நினைப்பவர்கள் இறுதியில் வீழ்ந்து போவார்கள் ! அவர்களுக்கு மீட்சி என்பது கிடையாது !

--------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------------------------------------------------------------

அடக்கம் உடையாரது வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவர்க்குத் தப்பாது கேடு வரும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 ,சிலை(மார்கழி),04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------