(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

இல்லாள் அகத்திருக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லாள் அகத்திருக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (21) இல்லாள் அகத்திருக்க இல்லாதது !

நல்ல மனைவி அமைந்தால் இல்லறம் இனிதே !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-


-----------------------------------------------------------------------------------------

பாடல்.(21)

----------------------------------------------------------------------------------------

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே யாமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும் !


----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை

இல்லாளும் இல்லாலே ஆம் ஆயின் இல்லாள்

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலி கிடந்த தூறு ஆய்விடும் !


-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இல்லாள் அகத்து இருக்க = (நற்குண நற்செய்கைகளை உடைய) மனையாள் வீட்டில் இருக்கின் ; இல்லாதது ஒன்றுமில்லை = (அவ்வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை ; இல்லாளும் இல்லாளே ஆயின் = மனையாள் இல்லாமற் போயினும் ; இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் = மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும்; அவ் வில் புலி கிடந்த தூறு ஆய்விடும் = அவ் வீடு புலி தங்கிய புதர் போல் ஆய்விடும்.

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

நற்குணமும் நற்செய்கைகளும் உடைய நங்கை மனையாளாக அமைந்துவிட்டால், அந்த இல்லத்தில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து உறவாட, என்றும்  இனிமை தவழ்ந்திருக்கும்; அந்த இல்லத்தில் இல்லாத செல்வம் (பொருள்) என்று ஏதுமிருக்காது !

 

ஆனால், மனையாள் இல்லாமற் போனாலும், மனையாள் இருந்து  அவள் பேச்சிலும் செயலிலும் தீக் கங்குகளைப் போல் வெப்பத்தின் வீச்சு தகித்துக் கொண்டிருந்தாலும், அந்த வீடானது உற்றார் உறவினர் யாரும் அண்ட முடியாத புலி தங்கிய புதர் போல ஆகிவிடும் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருள்களும் நிறைந்த வீடு ! அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடேயாகும் !


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------