(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (21) இல்லாள் அகத்திருக்க இல்லாதது !

நல்ல மனைவி அமைந்தால் இல்லறம் இனிதே !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-


-----------------------------------------------------------------------------------------

பாடல்.(21)

----------------------------------------------------------------------------------------

இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே யாமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும் !


----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை

இல்லாளும் இல்லாலே ஆம் ஆயின் இல்லாள்

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலி கிடந்த தூறு ஆய்விடும் !


-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இல்லாள் அகத்து இருக்க = (நற்குண நற்செய்கைகளை உடைய) மனையாள் வீட்டில் இருக்கின் ; இல்லாதது ஒன்றுமில்லை = (அவ்வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை ; இல்லாளும் இல்லாளே ஆயின் = மனையாள் இல்லாமற் போயினும் ; இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் = மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும்; அவ் வில் புலி கிடந்த தூறு ஆய்விடும் = அவ் வீடு புலி தங்கிய புதர் போல் ஆய்விடும்.

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

நற்குணமும் நற்செய்கைகளும் உடைய நங்கை மனையாளாக அமைந்துவிட்டால், அந்த இல்லத்தில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து உறவாட, என்றும்  இனிமை தவழ்ந்திருக்கும்; அந்த இல்லத்தில் இல்லாத செல்வம் (பொருள்) என்று ஏதுமிருக்காது !

 

ஆனால், மனையாள் இல்லாமற் போனாலும், மனையாள் இருந்து  அவள் பேச்சிலும் செயலிலும் தீக் கங்குகளைப் போல் வெப்பத்தின் வீச்சு தகித்துக் கொண்டிருந்தாலும், அந்த வீடானது உற்றார் உறவினர் யாரும் அண்ட முடியாத புலி தங்கிய புதர் போல ஆகிவிடும் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருள்களும் நிறைந்த வீடு ! அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடேயாகும் !


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

  

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (22) எழுதியவாறே காண் இரங்கு !

தொழில்கள் எல்லாம்  நற்பயனைத் தந்துவிடுவதில்லை. !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(22)

-----------------------------------------------------------------------------------------

எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே

கருதியவா றாமோ கருமம் கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்ததேல்

முற்பவத்திற் செய்த வினை !

 

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே

கருதியவாறு ஆமோ கருமம் - கருதிப் போய்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரம் காய் ஈந்ததேல்

முன் பவத்தில் செய்த வினை !

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

இரங்கும் மட நெஞ்சே = வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே ; கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு = (நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு ; காஞ்சிரங்காய் ஈந்ததேல் = (அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின் ; முற்பவத்தில் செய்த வினை = (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும் ; கருமம் கருதியவாறு ஆமோ = செய் தொழில்கள் (நீ) நினைத்தபடி ஆகுமோ ; எழுதியவாறே காண் = (கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக !

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

அறியாமையில் உழலும் மட நெஞ்சே ! நல்லபயனைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அஃது எட்டிக்காயைக் கொடுக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பில் செய்த தீவினையாகும் !

 

அதுபோல்,  செய்கின்ற தொழில்கள் எல்லாம் நீ நினைத்தபடி நற்பயனைத் தந்துவிடுவதில்லை. கடவுள் விதித்தபடியே அவை நடைபெறும் என்பதை அறிவாயாக

 

-----------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:- நீதிக் கருத்துகளையே சொல்லி வந்த 

ஔவையார், அதிலிருந்து சற்று விலகி  

கற்பகம், கடவுள், தலைவிதி, ஊழ் 

என்றெல்லாம் இப்பாடலில் சொல்லியிருப்பது 

இது அவரது பாடலாக இராதோ என்ற 

எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

செய்தொழில்கள் ஊழின்படியன்றி அவரவர் நினைத்தபடி ஆகா !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

------------------------------------------------------------------------------------------

 

 

 

 

  

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (23) கற்பிளவோடு ஒப்பர் கயவர் !

உடைந்த கல் ஒட்டாது ! உடைந்த பொற்கலம் ஒட்டும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல்.(23)

---------------------------------------------------------------------------------------

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

கல் பிளவோடு ஒப்பர் கயவர் கடும் சினத்துப்

பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வரே வில் பிடித்து

நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம் !

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

கயவர் = கீழோர் ; கடுஞ்சினத்து = கடுங் கோபத்தால் வேறுபட்டால் ; கல் பிளவோடு ஒப்பர் = கல்லின் பிளவு போல் திரும்பக் கூடார் ; பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வர் = (அப்படி வேறுபட்ட போது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர் (ஒருவர் கூட்டக் கூடுவர்) ; சீர் ஒழுகு சான்றோர் சினம் = சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம் ; வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் = வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவு போல (அப்போதே) நீங்கும்). 

 

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இரு மனிதர்களுக்கு இடையே கடுஞ் சினம் ஏற்பட்டு, மனம் வேறுபட்டுப் பிளவு ஏற்பட்டால், உடைந்த கற்பலகை எப்படி ஒன்று  கூடாதோ அப்படி மீண்டும் ஒன்று கூடாது   ஒழிவர் கடைநிலை இயல்புடைய மனிதர்கள் !

 

பொற்கலத்தில் பிளவு ஏற்பட்டால், அதை அனலில் காட்டிப் பொடி வைத்து ஊதி பிளவை நீக்குதல்போல மூன்றாம் மனிதர் தலையிட்டு இருவரையும் .அமைதிப்படுத்தி அறிவுறுத்தினால்அதை ஏற்றுத் தயக்கத்துடன்  ஒன்றிணையும் இடைநிலை மனிதர்களும் உண்டு !

 

ஆனால், வில்லில் நாணேற்றி அம்பினை நீரில் எய்து அதில் ஏற்படுத்தும் நீர்ப் பிளவு எப்படி ஒரே நொடியில் ஒன்று கூடிவிடுமோ அவ்வாறு சினைத்தைக் கைவிட்டு நொடியில் ஒன்றுகூடும் தலைநிலை மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் !


----------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

----------------------------------------------------------------------------------------

கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர் ; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர் !


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 


மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (24) நற்றாமரைக் கயத்தில் !

தாமரைப்பூ அருகில் அன்னம் சேர்வது போல் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல்.(24)

-----------------------------------------------------------------------------------------

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்

காக்கை உகக்கும் பிணம் !

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்

காக்கை உகக்கும் பிணம் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

கயத்தின் குளத்திலுள்ள ; நல் தாமரை = நல்ல தாமரைப்பூவை ; நல் அன்னம் சேர்ந்தாற் போல் = நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற் போல ; கற்றாரைக் கற்றாரே காமுறுவர் = கல்வியுடையோரை கல்வியுடையோரே விரும்பி (சேர்வர்) ; முதுகாட்டில் = சுடுகாட்டில் உள்ள ; பிணம் = பிணத்தை ; காக்கை உகக்கும் = காக்கை விரும்பும் ; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை = கல்வியில்லாத மூடரை ; மூர்க்கர் = மூடரே ; முகப்பர் = விரும்புவர்.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

குளத்தில் மலர்ந்திருக்கும் அழகிய தாமரைப் பூவை விரும்பி அன்னப் பறவை அதன் அருகில் சென்று தங்கி மகிழும் ! அதைப்போல, கல்வியறிவு உடைய சான்றோரை அவரைப் போல் கல்வியறிவிற் சிறந்த சான்றோரே விரும்பி நட்புக் கொள்வர் !

 

புறங்காட்டில் (சுடுகாடு) கிடக்கின்ற பிணங்களை காக்கைகளே மிக விரும்பி அணுகும்  ! அதைப்போல, கல்வியறிவில்லாத மூடர்களை, அவரைப் போன்ற மூடர்களே விரும்பி நட்புக் கொள்வர் !


-------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------------------------------------------------------------

கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர் !

 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 


மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (25) நஞ்சுடைமை தானறிந்து நாகம் !

நஞ்சுடைய நாகப் பாம்பு புதருக்குள் மறைந்து வாழும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(25)

-----------------------------------------------------------------------------------------

நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சிற்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு _ நெஞ்சில்

கரவு உடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவு இலா நெஞ்சத்தவர் !

 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

நாகம் = நஞ்சு உடைய நாகப் பாம்பானது ; தான் நஞ்சு உடைமை அறிந்து = தான் நஞ்சு உடையதாய் இருத்தலை அறிந்து ; கரந்து உறையும் = மறைந்து வழும் ; நீர்ப்பம்பு = (நஞ்சில்லாத) தண்ணீர்ப் பாம்பானது ; அஞ்சா புறம் கிடக்கும் = அச்சமின்றி வெளியே கிடக்கும் ; (அவை போல்) நெஞ்சில் கரவு உடையார் = மனத்தில் வஞ்சனையை உடையவர் ; தம்மைக் கரப்பர் = தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர் ; கரவு இலா நெஞ்சத்தவர் = வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர் ; கரவார் = தம்மை மறைத்துக் கொள்ளார்.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

தன்னிடம் நஞ்சு இருப்பதால், தன்னைக் கண்டால் மக்கள் அடித்துக் கொல்வர் என்று அஞ்சி நச்சுப் பற்களையுடைய நாகப் பாம்பு புதருக்குள் மறைந்து வாழும் !  அதைப்போல, நெஞ்சில் வஞ்சக எண்ணம் கொண்ட கீழோர், வெளிப்படையாகப் பழகாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பிறரிடமிருந்து ஒதுங்கி வாழ்வர் !

 

தன்னிடம் நச்சுப் பற்கள் இல்லை என்பதால், தன்னைக் கண்டால் மக்கள் அச்சம் கொண்டு அடித்துக் கொல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து  தண்ணீர்ப் பாம்பானது அஞ்சாமல் வெளியில் புழங்கும் ! அதைப்போல, நெஞ்சில் வஞ்சக எண்ணமில்லாத நல்லவர்கள், பிறரிடமிருந்து ஒதுங்காமல் ஒன்றியே வாழ்வார்கள் !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

வஞ்சனை உடையவர் மறைந்து ஒழுகுவார் ; வஞ்சனை இல்லாதவர் வெளிப்பட்டு ஒழுகுவார் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2050 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 


மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (26) மன்னனும் மாசறக் கற்றோனும் !

அரசனைவிடப் புலவனே உயர்ந்தவன் ஆவான் !

----------------------------------------------------------------------------------------

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புஎன்னும் சொற்றொடரை அடிக்கடிக் கேட்டிருப்பீர்கள். எந்தப் பாடலில் இந்த அடி வருகிறது, அந்தப் பாடலை இயற்றியது யார் என்னும் செய்திகள் பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. ஔவையார் இயற்றிய மூதுரையில் 26-ஆம் செய்யுளில் இவ்வரி வருகிறது. இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல்.(26)

------------------------------------------------------------------------------------------

மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு !

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு !

 

-------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

மன்னனும் = அரசனையும் ; மாசு அறக் கற்றோனும் = கசடறக் கற்ற புலவனையும் ; சீர்தூக்கின் = ஆராய்ந்து பார்த்தால் ; மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் = அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்பு உடையவன் ஆவன் ; மன்னற்கு = அரசனுக்கு ; தன் தேசம் அல்லால் = தன் நாட்டில் அல்லாமல் (பிற நாடுகளில்) ; சிறப்பு இல்லை = சிறப்பு இல்லையாகும் ; கற்றோற்கு = புலவனுக்கோ எனில் ; சென்ற இடமெல்லாம் சிறப்பு = அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும் !

 

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

நாடாளும் அரசனையும் நாவில் கல்விச் சுடர் தெறிக்கும் கற்றறிந்த புலவனையும் (நல்லறிஞரையும்) ஒப்பிட்டால், அரசனைவிடக் கசடறக் கற்ற புலவனே உயர்ந்தவன் ஆவான்.  எப்படியெனில், அரசனுக்கு தனது  நாட்டில் மட்டுமே சிறப்பு;  பிற நாடுகளில் சிறப்புக் கிடையாது; ஆனால்  கற்றறிந்த புலவனுக்கு அவன் சொந்த நாட்டில் மட்டுமல்லாது செல்கின்ற எல்லா நாடுகளிலும் அவனது கல்வியின் காரணமாகச் சிறப்பு உண்டாகும் ! ஆகவே இருவரில் உயர்ந்தவன் கசடறக் கல்வியைக் கற்ற புலவனே !

 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

அரசனிலும் புலவனே சிறப்புடையவன் ஆவான் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை”வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

----------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 


மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (27) கல்லாத மாந்தர்க்கு !

கல்வியறிவு இல்லாத மாக்களுக்கு கற்றவர் சொல் கூற்றம் !

------------------------------------------------------------------------------------------

கூற்றங்கள் பலவகை உள. அவற்றுள் நான்கு கூற்றங்கள் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் ஔவையார் ! அவர் இயற்றிய மூதுரையிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்.(27)

------------------------------------------------------------------------------------------

 கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் – மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

கல்லாத மாந்தர்க்கு கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்

அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய

வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

கல்லாத மாந்தர்க்கு = கல்வியறிவு இல்லாத மாக்களுக்கு ; கற்று உணர்ந்தார் சொல் = கற்று அறிந்தவருடைய உறுதிமொழி ; கூற்றம் = துன்பத்தைத் தருவதாம் ; அல்லாத மாந்தர்க்கு = (அறத்தில் நாட்டம் உடையர்) அல்லாத மனிதர்க்கு ; அறம் = அறத் தன்மையே அழிவைத் தருவதாம் ; மெல்லிய வாழைக்கு = மெல்லிய இலையுடைய வாழை மரத்துக்கு ; தான் ஈன்ற காய் கூற்றம் = அஃது ஈன்ற காயே அழிவைத் தருவதாம் ; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் = இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி ; கூற்றம் (கணவனுக்கு) அழிவைத் தருவளாம்.

 

------------------------------------------------------------------------------------------

கூற்றம்

துன்பம் தரும் நிகழ்வு 

எனப் பொருள் கொள்ள வேண்டும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

கற்றறிந்த அறிஞர்களின் சொற்கள் உண்மைகளையே எதிரொளிக்கும் என்பதால் கல்லாத மாந்தர்களின் மனத்துக்கு அவை ஏற்புடையவையாக இரா; எனவே அவை அவர்களுக்குத் துன்பம் அளிப்பதாகவே இருக்கும் !

 

அறவழிகளில் நாட்டம் கொள்ளாமல் மற வழிகளைத் தேர்வு செய்து ஒழுகிவரும் மூட மாந்தர்களுக்கு, பிறர் செய்யும் அறச் செயல்கள் அவர்கள் மனத்துக்குத் துன்பம் தருவதாகவே அமையும் !

 

உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் மாந்தர்களுக்கு நலந்தரும் மூலிகைகளாகவே திகழ்ந்தாலும்,  வாழை மரத்துக்கு அது ஈன்ற காய்களே  துன்பமான முடிவைத் தருவதாக அமையும் !

 

இல்லற வாழ்வில் கணவனுடன் ஒத்துப் போகாமல் தனக்கெனத் தனி வழி கண்டு அதில்  தடம் பதிக்க முயலும்  பொருத்தமில்லாத மனையாளே கணவனுக்குத் துன்பம் தரும் காரணியாக  அமைந்திடுவாள் !

 

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

கற்று அறிந்தவருடைய  உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளினாலே கணவனுக்கும் துன்பம் விளையும்.

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை”வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

------------------------------------------------------------------------------------------