(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

கான மயிலாட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கான மயிலாட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (14) கான மயிலாடக் கண்டிருந்த !

மயிலைப் பார்த்து வான்கோழியும் ஆட முயன்றதாம் !

------------------------------------------------------------------------------------------

கானகத்தில்  தனது அழகிய தோகையை விரித்து ஆடிய மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது அருவருப்பான சிறகை விரித்து ஆட முயன்றதாம். இந்தக் காட்சியை உவமையாக்கி தனது மூதுரையில் ஒரு பாடலைப் படைத்திருக்கிறார் ஔவையார். இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல்.14.

------------------------------------------------------------------------------------------

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கானம் = காடு ; தானும் அதுவாகப் பாவித்து = தன்னையும் மயில் போல நினைத்துக் கொண்டு ; தானும் = அதுவும் ; தன் பொல்லாச் சிறகை = தன் அழகில்லாத சிறகை ; கல்லாதான் = கற்க வேண்டியவைகளை முறைப்படிக் கல்லாதவன் ; கற்ற கவி = (கற்றோர் கூறுவதைச்  கேட்டு) ஒரு கவியைக் கற்றுக் கொண்டு சொல்லுதல்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

கற்க வேண்டிய கல்வியை முறைப்படிக் கல்லாத ஒரு மனிதன்வேறு ஒருவர் எழுதிய கவிதையை மனப்பாடம் செய்துகொண்டு வந்து மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுதல் என்பது காட்டிலுள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடுகையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த  வான்கோழியானது, தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக் கொண்டு தானும் தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதைப் போன்றதாகும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------

கல்லாதவன் கற்றவனைப் போல் நடித்தாலும் கற்றவன் ஆக மாட்டான் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை(மார்கழி),04]

{19-12-20121}

-----------------------------------------------------------------------------------------