(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

நல்லாரைக் காண்பதுவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லாரைக் காண்பதுவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (08) நல்லாரைக் காண்பதுவும் நன்றே !


நல்லாரைக் காண்பதுவும் நன்றே !

-----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (08)

-----------------------------------------------------------------------------------------

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொற் கேட்பது வும்நன்றேஎ நல்லார்

குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ

டிணங்கி யிருப்பதுவும் நன்று.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

----------------------------------------------------------------------------------------

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க.

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றேஎ நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நல்லாரை = நற்குணமுடையோரை ; காண்பதுவும் = பார்ப்பதுவும் ; நன்றே = நல்லதே ; நல்லார் = நல்லவருடைய ; நலம் மிக்க = பயன் நிறைந்த ; சொல் = சொல்லை ; கேட்பதுவும் = கேட்டலும் ; நன்றே = நல்லதே ; நல்லார் = நல்லவருடைய ; குணங்கள் = நற்குணங்களை ; உரைப்பதுவும் = பேசுதலும் ; நன்றே = நல்லதே ; அவரோடு = அந் நல்லவருடன் ; இணங்கி இருப்பதுவும் = கூடியிருத்தலும் ; நன்று = நல்லதே !

‘---------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------

நற்குணமுடைய சான்றோர்களை அவர்களது இருப்பிடத்துக்குச் சென்று அடிக்கடிக் காண்பது நல்லது அவர்களுடைய பயன் மிகுந்த  அறிவுரைகளை ஈடுபாட்டுடன்  கேட்டு ஒழுகுதலும் நல்லது ! நல்லவர்களின் அரும்பெரும் இயல்புகளை மனத்தில் உள்வாங்கிப் பிறரிடம் எடுத்து உரைப்பதும் நல்லது அத்தகைய நல்லவர்களுடன் கூடி வாழ்தலும் நல்லது ! ஏனெனில் இத்தகைய செயல்களால் நமக்கு நல்லறிவு உண்டாகும்; நம்மிடம் நல்லொழுக்கமும் குடிகொள்ளும் !

---------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------

நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 06)

{21-12-2021}

---------------------------------------------------------------------------------------