(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

நற்றாமரைக் கயத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்றாமரைக் கயத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (24) நற்றாமரைக் கயத்தில் !

தாமரைப்பூ அருகில் அன்னம் சேர்வது போல் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல்.(24)

-----------------------------------------------------------------------------------------

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்

காக்கை உகக்கும் பிணம் !

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்

காக்கை உகக்கும் பிணம் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

கயத்தின் குளத்திலுள்ள ; நல் தாமரை = நல்ல தாமரைப்பூவை ; நல் அன்னம் சேர்ந்தாற் போல் = நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற் போல ; கற்றாரைக் கற்றாரே காமுறுவர் = கல்வியுடையோரை கல்வியுடையோரே விரும்பி (சேர்வர்) ; முதுகாட்டில் = சுடுகாட்டில் உள்ள ; பிணம் = பிணத்தை ; காக்கை உகக்கும் = காக்கை விரும்பும் ; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை = கல்வியில்லாத மூடரை ; மூர்க்கர் = மூடரே ; முகப்பர் = விரும்புவர்.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

குளத்தில் மலர்ந்திருக்கும் அழகிய தாமரைப் பூவை விரும்பி அன்னப் பறவை அதன் அருகில் சென்று தங்கி மகிழும் ! அதைப்போல, கல்வியறிவு உடைய சான்றோரை அவரைப் போல் கல்வியறிவிற் சிறந்த சான்றோரே விரும்பி நட்புக் கொள்வர் !

 

புறங்காட்டில் (சுடுகாடு) கிடக்கின்ற பிணங்களை காக்கைகளே மிக விரும்பி அணுகும்  ! அதைப்போல, கல்வியறிவில்லாத மூடர்களை, அவரைப் போன்ற மூடர்களே விரும்பி நட்புக் கொள்வர் !


-------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------------------------------------------------------------

கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர் !

 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-----------------------------------------------------------------------------------------