(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

மடல் பெரிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மடல் பெரிது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (12) மடல் பெரிது தாழை !

 தாழை மடல் பெரியது மகிழம்பூ சிறியது  !

------------------------------------------------------------------------------------------

மூதுரையில் வரும் பாடல்கள் நான்கு அடிகளால் ஆனவை. அடியளவில் சிறியவையானாலும் அவை நமக்கு எடுத்து உரைக்கும் நீதிக் கருத்துகள்  மதிப்பளவில் பெரியவை. ஔவையாரின்  அருட்கொடை இந்நூல். அதிலிருந்து ஒரு பாடல்!

-----------------------------------------------------------------------------------------

பாடல்.12.

-----------------------------------------------------------------------------------------

 

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூரல்

உண்ணீரு மாகி விடும்.

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

 

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்;

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா கடல் பெரிது

மண் நீரும் ஆகாது அதனருகே சிற்றூரல்

உண்ணீரும் ஆகி விடும்.

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

 

தாழை மடல் பெரிது = தாழம் பூ இதழ்களினாலே பெரிதாக இருக்கின்றது ;மகிழ் கந்தம் இனிது = மகிழம் பூ (இதழ்களினாலே சிறிதாக இருந்தாலும்) மணத்தினாலே (தாழம் பூவினும்)  பெரிதாக இருக்கின்றது ; கடல் பெரிது = ஆழிப் பெருங்கடலானது வடிவில் பெரிதாக இருக்கின்றது; மண் = (ஆயினும்) உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குக் கூட  (மண்ணுதல் = கழுவுதல்) ; நீரும் ஆகாது = உகந்த நீரும் ஆகாது ; அதனருகே = அப் பெரிய கடலின் அருகே ; சிற்றூரல் = (தோண்டப் பெறும்) சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர் ; உண் நீரும் ஆகும் = குடிக்கத் தக்க நீரும் ஆகும் ; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா =  உருவத்தினாலே சிறியவர் என்று மதியாமல் இருக்க வேண்டாம்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------------

 

தாழம் பூ உருவத்தில் பெரியதாக  இருந்தாலும், அதன் மணம், (சிலருக்குப் பிடித்தாலும்) இனியது என்று பெரும்பாலோர் சொல்வதில்லை. ஆனால் மகிழம் பூ உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இனிய நறுமணத்தில்  தாழம் பூவை விடப் பெரியது. அதுபோல், கடலானது வடிவத்தில் மிகப் பெரியது என்றாலும், அதன் நீரானது அழுக்கு உடம்பைக் கழுவுவதற்குக் கூடப் பயன் படுவதில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தோண்டப்படும் சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீரானது, அழுக்கு தீரக் குளிப்பதற்கு மட்டுமின்றிக் குடிப்பதற்கும் கூடப் பயன்படுகிறது. ஆதலால், ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று மதிப்புத் தராமல் புறந் தள்ளக் கூடாது !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------

 

உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பதுண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு. ஆகையால், தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது !


-----------------------------------------------------------------------------------------

கலைச் சொற்கள்

உண்ணீர் = DRINKING WATER ;

மண்ணீர் = WATER USED FOR OTHER PURPOSES.

( சென்னை மக்கள் மொழியில் உப்புத் தண்ணீர்”)

சிற்றூரல் = SPRING

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052, சிலை (மார்கழி),04]

{19-12-2021}

-----------------------------------------------------------------------------------------