(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

அடுத்து முயன்றாலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடுத்து முயன்றாலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (05) அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் !


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் !

 -----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (05)

------------------------------------------------------------------------------------------

அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி

எடுத்த கருமங்க ளாகா தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்

பருவத்தா லன்றிப் பழா. 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி-

எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா.

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

தொடுத்த = கிளைத்த ; உருவத்தால் நீண்ட = வடிவத்தால் நீண்ட ; உயர் மரங்கள் எல்லாம் = உயர்ந்த மரங்களெல்லாம் ; பருவத்தால் அன்றி = பழுக்கும் காலம் வந்தால் அல்லாமல் ; பழா = பழுக்க மாட்டாவாம் ; (அதுபோல) அடுத்து முயன்றாலும் = அடுத்தடுத்து முயற்சி செய்தாலும் ; ஆகுநாள் அன்றி = முடியும் காலம் வந்தால் அல்லாமல் ; எடுத்த கருமங்கள் = மேற்கொண்ட செயல்கள் ; ஆகா = முடியாவாம்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

கிளைத்துச் செழித்து உயர்ந்து வளர்ந்திருக்கும் தரமான மரங்களென்றாலும் கூட, காய்த்துக் கனிதருகின்ற பருவம் வந்தால் தான் அவை காய்க்கும்; நமக்குக் கனிகளையும் தரும் !

அதுபோல, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும், வாய்ப்பான நேரத்தையும் காலத்தையும் அறிந்தே தொடங்க வேண்டும்; வாய்ப்பில்லா நேரமாயின் எத்துணை முயன்றாலும் அச்செயலை நாம் செய்து முடித்திடவே முடியாது !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

எந்தச் செயலும் முடியும் காலத்தில் தான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)

{20-12-2021}

------------------------------------------------------------------------------------------