(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

மருவினிய சுற்றமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருவினிய சுற்றமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (29) மருவினிய சுற்றமும் வான்பொருளும் !

சீதேவி அருளிருந்தால் அனைத்தும் கிடைக்கும் ! 

----------------------------------------------------------------------------------------

கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் மூதுரையைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  30 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------------------

பாடல் (29)

------------------------------------------------------------------------------------------

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமு மெல்லாம் திருமடந்தை

ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து

போம்போ தவளோடும் போம் !

 

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை

ஆம் போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து

போம் போது அவளோடும் போம் !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மருவு இனிய சுற்றமும் = தழுவிய இனிய உறவும் ; வான் பொருளும் = மேலாகிய பொருளும் ; நல்ல உருவும் = நல்ல அழகும் ; உயர் குலமும் எல்லாம் = உயர்வாகிய குலமும் என்னும் இவைகளெல்லாம் ; திருமடந்தை ஆம் போது = சீதேவி வந்து கூடும்போது ; அவளோடும் ஆகும் = அவளுடனே வந்து கூடும் ; அவள் பிரிந்து போகும் போது = அவள் நீங்கிப் போம் பொழுது ; அவளோடு போம் = அவளுடனே நீங்கிப் போகும்.

 

----------------------------------------------------------------------------------------

நீதிக் கருத்துகள் பலவற்ற எடுத்துரைத்த ஔவையார், அந்தத் தடத்திலிருந்து விலகி, ஆன்மிகத்துள் புகுவது - இப்பாடல் ஔவையார் இயற்றியது அல்லவோ என்னும் ஐயத்தை உருவாக்குகிறது !

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

சீதேவி என்னும் செல்வத் திருமகள் ஒரு இல்லத்தில் குடியிருக்கத் தொடங்கும் போது, இனிய உறவுகள் கூடும்; மதிப்பு மிக்க செல்வங்கள் சேரும்; நல்ல மேனியழகு உண்டாகும்;  பிறந்த குடியின் பெருமை பெருகும் ! அவள் வெறுப்புற்று விலகிச் சென்றால், கிடைத்தவை அனைத்தும் அவளோடு சேர்ந்து போய்விடும் ! உறவும், செல்வமும், அழகும், குடிப் பெருமையும் என்றுமே நிலையில்லாதவை !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

சுற்றமும், பொருளும், அழகும், உயர் குலமும் நிலையுடையனவல்ல !

-----------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”மூதுரை” வலைப்பூ,

[தி.ஆ:2052: சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

----------------------------------------------------------------------------------------