(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

வேங்கை வரிப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேங்கை வரிப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (15) வேங்கை வரிப்புலி நோய் !

 வேங்கைப்புலியின் நோய் தீர்த்த மருத்துவன் ! 

-----------------------------------------------------------------------------------------

நோய்வாய்ப்பட்ட புலியொன்றை மருத்துவம் பார்த்துப் பிழைக்க வைத்த மருத்துவனை, அப்புலியே அடித்துக் கொன்று உண்டுவிட்டதாம். இந்தக் காட்சியை உவமையாக்கி, தீயவருக்கு உதவி செய்யாதீர் என்று நம்மை எச்சரிக்கும் ஔவையார்  தனது மூதுரையில்  படைத்திருக்கும் பாடலைப் பாரீர் !.

-----------------------------------------------------------------------------------------

பாடல்.15.

-----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக் காகார மானாற்போல் பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்

கல்லின்மே லிட்ட கலம் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற் போல் பாங்கு அறியாப்

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

வேங்கை வரிப்புலி நோய் = வரிகளை உடைய வேங்கைப் புலியின் விடநோயை (நஞ்சினால் ஏற்பட்ட நோயை) தீர்த்த = போக்கிய ; விடகாரி = நஞ்சு முறிவு மருத்துவன் ; ஆங்கு அப்பொழுதே ; அதனுக்கு = அப்புலிக்கு ; ஆகாரம் ஆனாற் போல் = இரையானாற் போல ; பாங்கு அறியா = நன்றியறிவு இல்லாத ; புல் அறிவாளர்க்கு = அற்ப அறிவினருக்கு ; செய்த உபகாரம் = செய்யப்பட்ட உதவி ; கல்லின் மேல் இட்ட கலம் = கல்லின் மேல் போடப்பட்ட மட்கலம் போல (அழிந்து பயனற்றுப் போகும்)

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

காட்டில் வாழ் புலியொன்று நஞ்சு கலந்த  உணவை உண்டதால், நோயுற்றது; அதன்மேல் இரக்கம் கொண்ட நஞ்சு முறிவு மருத்துவன் ஒருவன் மாற்று மருந்தைக் கொடுத்து அதைப் பிழைக்க வைத்தான்; உயிர்த்து எழுந்தவுடன் அந்தப் புலி முதல் வேலையாக அந்த மருத்துவனையே அடித்துக் கொன்று உண்டுவிட்டது. அதைப்போலத் தான் தீயவர்களுக்கு நாம் செய்யும் உதவியும் !

 

பகுத்தறிவும் பண்பாடும் இல்லாத  இழிந்த இயல்பினருக்கு நாம் உதவி செய்யக் கூடாது.  தேவையற்ற இரக்கம் கொண்டு  அவர்களுக்கு  உதவி செய்தால்  கல்லின் மேலே போடப்பட்ட மண் கலத்தை போல, நம் உதவியின் பயன் நொறுங்கி அழிந்துபோய்விடும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

 தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),18]

{04-09-2019}

-----------------------------------------------------------------------------------------