(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (11) பண்டு முளைப்பது அரிசியே !


விண்டு உமி போனால் முளையாது !

 ----------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு வாக்குண்டாம்என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (11)

-----------------------------------------------------------------------------------------

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

விண்டுமி போனால் முளையாதாம் கொண்டபேர்

ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமஞ் செயல் !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாது கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல் !

 

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

பண்டு முளைப்பது = (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது ; அரிசியே ஆனாலும் = அரிசியே யாயினும் ; உமி விண்டு போனால் = உமி நீங்கிப் போனால் ; முளையாது = (அவ்வரிசி முளைக்காது ; (அதுபோல) கொண்ட = பெற்ற ; பேர் ஆற்றல் உடையார்க்கும் = பெரிய வல்லமை உடையவருக்கும் ; அளவு இன்றி = துணை வலி இல்லாமல் ; ஏற்ற கருமம் = எடுத்துக் கொண்ட காரியத்தை ; செயல் ஆகாது = செய்து முடித்தல் இயலாது.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

தன்னைச் சுற்றி மூடியிருக்கும் உமி நீங்குவதற்கு முன்பாகவே அரிசியிலிருந்து முளை அரும்பிவிடுகிறது; இருந்தாலும் அந்த உமி நீங்கிவிட்டால் அரிசி ஒருபோதும் முளைவிட முடியாது ! அதைப்போல அனைத்து வல்லமையும் படைத்த மனிதனாக இருந்தாலும்கூட, தான் தொடங்கிய செயலை முடிப்பதற்கு  துணைவர்களின் வலிமை கண்டிப்பாகத் தேவை ! துணைவலி இல்லாமல் எந்தச் செயலையும் யாரும் முடித்திட முடியாது !

----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------

மிக்க வல்லமை உடையவர்க்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க, துணை வலி வேண்டும் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக